33 ஆண்டுகளுக்கு அப்புறம் அமிதாப் பச்சன் உடன் இணைந்த ரஜினிகாந்த்!

படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்ற நிலையில், அங்கே அமிதாப் பச்சன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், 33 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய குருவுடன் இணைந்து பணியாற்றப் போவதை நினைக்கும் போதே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தர்பார், அண்ணாத்த என தொடர்ந்து இரு தோல்வி படங்களை கொடுத்த நிலையில், அடுத்ததாக அதிலிருந்து மீண்டும் குதிரை போல எந்திரிக்க வேண்டும் என 72 வயதிலும் ஜெயிலர் படத்தைக் கொடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் விஜய் படங்கள் அடுத்தடுத்து இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை உயர்த்தி பெருமை சேர்த்து வருகின்றன. ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். போகிற ஸ்பீடை பார்த்தால் இந்த ஆண்டு இறுதியிலேயே தலைவர் 170 படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் ஞானவேல் முடித்து விடுவார் என்றே தெரிகிறது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என மல்டி ஸ்டாரர் படமாக தலைவர் 170 உருவாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அனைவரையும் மதிக்கும் உயரிய பண்பு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆரம்பத்தில் அமிதாப் பச்சன் படங்களை ரீமேக் செய்து நடித்தே சூப்பர்ஸ்டார் ஆன ரஜினிகாந்த் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னுடைய குருவுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என அமிதாப் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். அந்தா கனூன், ஹம் மற்றும் கெராஃப்டார் உள்ளிட்ட சில படங்களில் அமிதாப் பச்சன் உடன் அப்பவே இணைந்து ரஜினி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.