உலகம் சிறந்த காதல் கதைகளால் நிரம்பியிருக்கிறது: ராஷ்மிகா

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிகை ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் நடிகர் விஜய்யுடன் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தியில் நடிகர் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1-ந்தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ரெயின்போ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘தி கேர்ள்பிரண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை ராஷ்மிகா தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகம் சிறந்த காதல் கதைகளால் நிரம்பியிருக்கிறது. ஆனால் இதுவரை பார்க்காத அல்லது கேள்விப்பட்டிருக்காத சில காதல் கதைகளும் இருக்கின்றன. ‘தி கேர்ள்பிரண்ட்’ அப்படி ஒரு கதை” என்று பதிவிட்டுள்ளார்.