விஜய்யின் ‘லியோ’ வெற்றிவிழாவுக்கு காவல்துறை அனுமதி!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா நவம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம்வாசுதேவ் மேனன், மடோனா, சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படம் முதல் வாரத்தில் ரூ.461 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1- ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ள நிலையில், அதற்கு காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நாளை மறுநாள் ‘லியோ’ வெற்றிவிழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.