அமைச்சர் உதயநிதி தற்போது அம்பேத்கர், பெரியாரையும் தாக்குகிறார்: கஸ்தூரி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலில் சனாதனத்தை தாக்கியதாகவும் தற்போது அம்பேத்கர், பெரியாரையும் தாக்குவதாகவும் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றபோது டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். பாஜகவினர் மட்டுமின்றி பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு மாநில காவல் நிலையங்களிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 25 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜெயச்சந்திரன், சனாதனம் குறித்து பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதியிடம் உயர்நீதிமன்றத்தின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் தான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும் எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம் என்றும் கூறினார். மேலும் தான் சொன்ன வார்த்தையில் இருந்து எதையும் மாற்றிக்ககொள்ள போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். மேலும் தன்னுடைய கொள்கையைதான் தான் பேசியதாகவும், அம்பேத்கர் பேசியதைவிட பெரிதாக எதுவும் பேசவில்லை, தந்தை பெரியார் பேசியதை விட பெரிதாக தவறாக எதுவும் பேசவில்லை. திருமாவளவன் பேசியதை விட தான் ஒன்றும் தவறாக பேசவில்லை என்றும் தெரிவித்தார். முதலில் மனிதனாக இருக்க வேண்டும். அமைச்சர், எம்எல்ஏ பதவியெல்லாம் இன்று வரும் போகும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு குறித்து நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், “முதலில் அவர் சனாதன தர்மத்தை தாக்கினார். இப்போது அம்பேத்கரையும், பெரியாரையும் தாக்குகிறார்.. தன்னையும் திருமாவளவனையும் அவர்களுடன் இணைத்துக்கொண்டு..” என குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியபோதே கடுமையாக விளாசியிருந்தார் நடிகை கஸ்தூரி. தொடர்ந்து திமுகவின் திராவிட மொழி பாடம் என அவர்கள் செயல்பாட்டையும் சாடி வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சனாதன அம்பேத்கர் மற்றும் பெரியாரை இழுத்திருப்பதையும் நடிகை கஸ்தூரி விளாசியுள்ளார்.