‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ சிறப்பான படைப்பு என இயக்குனர் சங்கர் பாராட்டு!

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான படைப்பு என இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கு இயக்குனர் சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு. கதை- சினிமாவுக்கு மரியாதை. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி. கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அதிரடி. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சிறப்பான நடிப்பு. ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள். இவ்வாறு இயக்குனர் சங்கர் பதிவிட்டுள்ளார்.