சென்னை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்!

மார்க் ஆண்டனி படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து நடிகர் விஷால் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை இந்தி மொழியில் வெளியிட மும்பை சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. அப்போது ரூ 6.5 லட்சம் கொடுக்குமாறு இடைத்தரகர் மூலம் சென்சார் அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

மார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ரூ 3 லட்சம் கேட்டதாகவும் சான்றிதழை வழங்க ரூ 3.5 லட்சம் கேட்டனர். மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ 6.5 லட்சம் பணத்தை இரு தவணைகளாக கொடுத்து மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட்டேன் என நடிகர் விஷால் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களையும் வெளியிட்டார் விஷால். இனி எந்த தயாரிப்பாளர்களுக்கும் இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்றார். இதற்காகத்தான் இந்த விவகாரத்தை மகாராஷ்டிரா முதல்வர், பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நடிகர் விஷால் அளித்த புகாரின் பேரில் 3 இடைத்தரகர்கள் மற்றும் மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகிய மூன்று அதிகாரிகளின் பெயர் சிபிஐ-ன் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மும்பையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலை சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தனது மேலாளர் ஹரிகிருஷ்ணனுடன் நடிகர் விஷால் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.