திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்: ஷீலா ராஜ்குமார்!

திரெளபதி, மண்டேலா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். நடிப்பு பட்டறையை நடத்தி வரும் தம்பி சோழன் என்பவரை இவர் திருமணம் செய்து வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கடந்த சில ஆண்டுகளில் தங்கள் விவாகரத்தை அறிவித்து அதிர்ச்சியளித்தனர். இந்நிலையில், இன்னொரு பிரபல தமிழ் சினிமா நடிகையும் தற்போது தனது விவாகரத்தை அதிரடியாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். 2016ம் ஆண்டு வெளியான ஆறாது சினம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த ஷீலா ராஜ்குமார் 2017ல் வெளியாகி விருதுகளை வென்ற டூலெட் படத்தில் நாயகியாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மனுசங்கடா, அசுரவதம், கும்பலாங்கி நைட்ஸ், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திடீரென மோகன். ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் சாதிய படம் என்கிற சர்ச்சை வெடித்தது. மேலும், மண்டேலா படத்தின் புரமோஷனுக்காக பேசும் போது அப்படியொரு படத்தில் நடித்தது தன் வாழ்நாளிலேயே செய்த பெரிய தப்பு எனக் கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருந்தார். யோகி பாபுவுக்கு ஜோடியாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜோதி, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் காதலியாக நடித்திருப்பார்.

தம்பி சோழன் எனும் கூத்துப் பட்டறையை நடத்தி வருபவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த ஷீலா ராஜ்குமார் கணவருடன் என்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது என தெரியவில்லை. திடீரென தற்போது, “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும் @ChozhanV” என தனது கணவருக்கு நன்றி தெரிவித்து விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.