இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? நன்றாகி வாங்கண்ணே: மன்சூர் அலிகான்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம் பெற வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன் என நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தீவிர இருமல், காய்ச்சல், சளி காரணமாக கேப்டன் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொண்டையில் தொற்று மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லை. நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புவதாகவும், அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இதனால், பதறிப்போன ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், விஜயகாந்த் நலம் பெற வேண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கூறியுள்ளதாவது:-

அண்ணே.. தாங்களுக்கு ஏன் இந்த சோதனை? உங்கள் மன்சூரலிகான் அழுகிறேன். நன்றாகி வாங்கண்ணே.. கேப்டன் நடனக்காரனான என்னை நாடறியச்செய்த திருமலை நாயக்க நாயகனே. இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? எதிர்நாயகனை அடிக்கவே விடாது, பில்டப் செய்தும் டூப் போட்டும் சூப்பர்மேனாய் கதாநாயகர்கள் வலம் வந்த காலத்தில், திருப்பி அடி, பறந்து அடி, என தாங்களை உதைக்க வைத்து, திருப்பி காற்றிலே பறந்து ஒரு கழுதை உதை உதைப்பீர்களே! அண்ணே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்? மதுரை மீனாட்சி அம்மன் தூண்கள் போன்று இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ மன்னவனே. நாயகிகளை, துரத்த வைத்து, கடத்த வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து. ஓடி. ஆடி … உழைப்பை பிழிய வைத்தவனே! சாப்பிடுகிற சோறு உடம்பில் ஒட்ட வைத்தவனே! நீவீர் வாழ்வீர் நூறாண்டு.

யாரோ தவறாக வீடியோவை கட் செய்து அனுப்பிவிட்டனர் கடவுளிடம். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இங்குளர் நிறைய. கருப்பு எம்ஜிஆரே. ஆயிரக்கணக்கானரை வாழவைத்த ஆலவிருட்சமே, மக்களோடுதான் கூட்டணி என்றாய், மகராசி அம்மாவுடன் கூட்டணி வைத்து எதிர்கட்சி தலைவரானாய், மகராசியை மரணிக்கச் செய்துவிட்டனர். எங்கள் மாநகர காவலனை, பூந்தோட்ட காவல்காரனை வேதனைக்கு உள்ளாக்காதீர் இறைவா. இன்னல்களை இலகுவாக்கு, கேப்டனை மருத்துவத்தில் மீட்டு புரட்சிக் கலைஞராய் ஒப்படை, நண்பன் ராவுத்தருக்காக தர்கா சென்றவரை, அவரின் ரசிக, ரசிகையர் பக்தர்களுக்காக பத்திரமாக தா.100வது படம் எந்த நாயகர்களுக்கும் ஓடியதில்லை, தாங்களது 100வது படத்தில் முதல் வாய்ப்பளித்து வெற்றி திருமகளை மாலையிட வைத்த பிரபாகரனே, வாழிய வாழிய நூறாண்டு.. தாங்களிடம் அடிவாங்க காத்திருக்கும் தம்பி மன்சூரலிகான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.