வாழ்க்கையில் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்: ரஜினிகாந்த்!

வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தாலே போதும் நிம்மதியாக இருக்கலாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன்பாக அவரது ரசிகர்கள் காலையிலேயே குவிந்துவிட்டனர். உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு என முழக்கங்கள் எழுப்பி வந்தனர். ரசிகர்கள் தன்னை பார்க்க திரண்டு வந்ததை அடுத்து தனது வீட்டின் குட்டிச்சுவரில் நின்று பொங்கல் தரிசனம் தந்தார் ரஜினிகாந்த். இரண்டு கைகளையும் அசைத்து தனது அன்பை வெளிப்படுத்திய அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கேட்டை திறந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

பொங்கல் வாழ்த்துக் கூறிய ரஜினிகாந்த், வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தாலே போதும் நிம்மதியாக இருக்கலாம் என்ற அறிவுரையையும் இன்று வழங்கினார். ஒழுக்கமும், நேர்மையும் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் எனத் தெரிவித்தார். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த பொன்நாளில் தாம் இறைவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்தார். மேற்கொண்டு எந்த விவகாரம் பற்றியும் ரஜினி பேசவில்லை.