தேனி கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடளுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணியின் உடல் இன்று தேனி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜா பங்களாவில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி(47) பின்னணி பாடகரான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்ற மலையாள படத்தில் குழந்தை பாடகியாக அறிமுகமானார். பின்பு ராசய்யா, அலெக்சாண்டர், அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவருக்கும் இவருக்கும் திருமணமானது. 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

இதனிடையே, சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். இவரது உடல் நேற்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்பு இவரது உடல் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டது. லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. அங்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த வளாகத்தில்தான் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே இடத்தில் பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பவதாரிணியின் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, நடிகர்கள் அரவிந்த், கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் தற்போது பவதாரிணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.