சினிமாவில் பல பிரச்சனைகள் இருக்கு: சாக்ஷி அகர்வால்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தமிழில் காலா, விஸ்வாசம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி, தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட சாக்ஷி அகர்வால், அப்போதே ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, ஐடியில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்த போதும், சினிமாவில் இருந்த ஆர்வத்தால், அந்த வேலையை தூக்கிப்போட்டுவிட்டு சினிமா பக்கம் தாவினார். அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த இவர், கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

பிரபலமாக இதுமட்டும் போதாது என்பதை தெரிந்து கொண்ட சாக்ஷி அகர்வால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் குட்டி குட்டி டவுசருடன் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த இவர், கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால், தனது சினிமா வாழ்க்கை குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என் குடும்பத்தில் அனைவரும் நன்றாக படித்தவர்கள், அனைவரும் பிஸ்னஸ் செய்கிறார்கள் அவர்களுக்கு சினிமா பற்றி எதுவுமே தெரியாது. நானும் நன்றாக படித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலைப்பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது என் சம்பளம் 2.5 லட்சம், நான் சொல்வது ஆறு வருடத்திற்கு முன்பு, இப்போதும் அங்கேயே வேலை செய்து இருந்தால் இன்னும் என் சம்பளம் அதிகமாகித்தான் இருக்கும். ஆனால், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் இதில் நுழைந்தேன். இதில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இதை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர பணத்தை இல்லை. அது மட்டுமில்லாமல் சினிமாவில் பல பிரச்சனைகள் இருக்கு, ஆனால், அவை அனைத்தையும் தாண்டித்தான் நாம் முன்னேற வேண்டும் என்று சாக்ஷி அகர்வால் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.