ஜான்வி விஷயத்தில் எதை நினைத்து ஸ்ரீதேவி பயந்து எச்சரித்தாரோ அது தான் நடக்கிறது!

ஜான்வி விஷயத்தில் எதை நினைத்து ஸ்ரீதேவி பயந்து எச்சரித்தாரோ அது தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விஷயத்தால் ஜான்வி கபூர் வேதனையில் இருக்கிறார். நடிப்பு வரலைனா, ஏன் தொடர்ந்து நடிக்கணும் என எழுப்பப்படும் விமர்சனம் தன்னை காயப்படுத்துவதாக தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான தடக் படம் மூலம் நடிகையானவர் ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர். அதில் இருந்து தொடர்ந்து வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் என்ன தான் சிறப்பாக நடித்தாலும் உங்கம்மா ஸ்ரீதேவி அளவுக்கு இல்லை என இந்தி சினிமா ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். மேலும் ஸ்ரீதேவி, போனி கபூரின் மகள் என்கிற ஒரே காரணத்திற்காக நடிக்கத் தெரியாத ஜான்விக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வருவதாக விமர்சிக்கிறார்கள். இது குறித்து தற்போது ஜான்வி கபூர் பேசியிருக்கிறார்.

ஜான்வி கபூர் கூறியிருப்பதாவது, நாம் எது செய்தாலும் சிலர் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அப்படி சொன்னால் அவர்கள் முக்கியமானவர்கள் போன்று உணர்வார்கள். கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும்போது, நடிக்க வராவிட்டால், ஏன் நடிக்கணும், நெபோ பேபி என யாரோ ஒருவர் இன்டர்நெட்டில் சொல்லும்போது ரொம்ப வேதனையாக இருக்கிறது. ஒரு நிமிடத்தில் நாம் ஒன்றுமே இல்லை என்பது போன்றாகிவிடுகிறது என்றார்.

ஜான்வி மேலும் கூறியதாவது, அதே சமயம் யாராவது ஒருவர் நீங்கள் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள். அடுத்த படத்தில் உங்களின் நடிப்பை மேலும் மேம்படுத்தலாம் என்று கூறினால் அவரின் கருத்தை நான் மதிக்கிறேன். சிலருக்கு நல்ல வார்த்தைகளே கிடைப்பது இல்லை. அதனால் மோசமாக பேசி உங்களின் சந்தோஷத்தை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சோகமானவர்கள் என்றார்.

ஜான்வியும், குஷியும் நடிகையாகக் கூடாது என நினைத்தார் ஸ்ரீதேவி. அம்மா, நான் நடிகையாக விரும்புகிறேன் என ஜான்வி கூறியபோதே அவரை எச்சரித்தார் ஸ்ரீதேவி. உன் முதல் படத்திலேயே என் லேட்டஸ்ட் பட நடிப்புடன் ஒப்பிட்டு பேசுவார்கள். நீ எது செய்தாலும் என்னுடன் ஒப்பிடுவார்கள். விமர்சனங்களை எல்லாம் ஏற்கத் தயாரா என்று கூறியிருக்கிறார். ஸ்ரீதேவி பயந்தது தான் தற்போது நடந்து வருகிறது. ஜான்வி எது செய்தாலும் அவருடன் ஒப்பிடுகிறார்கள் ரசிகர்கள்.

படத்திற்கு படம் தன் நடிப்பை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறார் ஜான்வி கபூர். இருந்தாலும் ஸ்ரீதேவியின் நடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்து ஜான்வியை விளாசுகிறார்கள். இது தான் அவரை காயப்படுத்துகிறது. இப்படி எல்லாம் நடக்கும் என்பது தெரிந்து தான், உனக்கு நடிப்பு வேண்டாம் கண்ணே என எச்சரித்திருக்கிறார் ஸ்ரீதேவி. அதே சமயம் மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்க விரும்பாமல் ஜான்வி நடிகையாக சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார் . அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. தான் சிறு வயதில் ஜான்வியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தங்கை குஷி கபூர். அதில் ஒரு புகைப்படத்தில் ஜான்வி தான் தனக்கு மிகவும் பிடித்தவர் என தெரிவித்துள்ளார். மற்றொரு புகைப்படத்திலோ ஜான்வி தான் தனக்கு பெரிய தலைவலியே என கலாய்த்திருக்கிறார்.

இந்நிலையில் ஜான்வி கபூர், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, காதலர் என கிசுகிசுக்கப்படும் ஷிகார் பஹாரியா மற்றும் நண்பர் ஆர்ரி ஆகியோருடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவிலுக்கு வந்ததும் அவருக்கு வி.ஐ.பி. அந்தஸ்து அளிக்கப்பட்டது. கோவிலில் வணங்கி, பிரகாரங்களை சுற்றி வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதன்பின், கோவில் மேடையில் வேத மந்திரங்களை உச்சரித்தல் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளில் பங்கேற்றார். அவருடன், வேட்டி மேல் துண்டு அணிந்தபடி ஷிகார் பகாரியாவும் மற்றும் நண்பர் ஆர்ரியும் வந்திருந்தனர்.