நடிகை மீரா சோப்ராவுக்கு வரும் 12-ந்தேதி திருமணம்!

ரசிகர்களால் ‘நிலா’ என்று அறியப்படும் நடிகை மீரா சோப்ராவுக்கு வரும் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது.

தமிழில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான ‘அன்பே ஆருயிரே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. இவர் ‘நிலா’ என்று ரசிகர்களால் பரவலாக அறியப்படுகிறார். தமிழில் மருதலை, ஜாம்பவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்ற மீரா சோப்ரா, தொடர்ந்து இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது 40 வயதாகும் நடிகை மீரா சோப்ரா, தனது காதலர் ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், வருகிற 12-ந்தேதி இந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. பாரம்பரிய முறையில், அதே சமயம் பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த விழாவாக இந்த திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி வரும் 11-ந்தேதி மாலை மெகந்தி விழாவும், 12-ந்தேதி ஹல்தி விழாவும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 12-ந்தேதி மாலை 4.30 மணியளவில் பாரம்பரிய முறைப்படி மீரா சோப்ரா-ரக்ஷி கெஜ்ரிவால் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவிற்கு மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சில திரைப் பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.