மனித ரூபத்தில் உலவும் பிசாசுகள்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

அண்மையில் புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்த கொடூர நிகழ்வு குறித்து இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடும் கோபத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ‘3’ படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமான இவர் கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார். இதனையடுத்து டைரக்ஷனுக்கு மிகப்பெரிய கேப் விட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். எந்தப்படமும் இயக்க கமிட் ஆகாமல் இருந்தார். இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தினை இயக்கினார். விஷ்ணு விஷால், விக்ராந்த் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக படமாக்கப்பட்டு இருந்தது. அத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்தார். இதனையடுத்து கடந்த மாதம் ரிலீசான ‘லால் சலாம்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்தார். அதில் கூறியுள்ளதாவது:-

இனி எந்தவொரு பெண்ணுக்கும், பெண் குழந்தைக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது. எந்த இடத்திலும் மனித ரூபத்தில் உலவும் பிசாசுகள் கையில் பெண்கள் சிக்கி சின்னாபின்னமாகிவிட கூடாது. கடவுள் இதுபோன்ற கேடு கெட்ட நபர்களை நிச்சயமாக தண்டிப்பார். சட்டமும், கடவுளும் அவர்களுக்கு தண்டனையை அளிக்காத பட்சத்தில் அந்த பெண் குழந்தைகளுக்காக நம்முடைய கண்ணீர் இருக்கும். அந்த பெண் குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன். புதுச்சேரி விஷயத்தை கேள்விப்பட்ட போது என்னுடைய இதயம் நடுங்கி விட்டது. இவ்வாறு தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.