படத்தை பார்க்காமலேயே அவதூறாக கேலி செய்வது சரியல்ல: நடிகை அனுபமா

படத்தை பார்க்காமலேயே அவதூறாக கேலி செய்வது சரியல்ல. இப்போது எனக்கு சினிமா பற்றிய முதிர்ச்சி வந்துள்ளது என்று நடிகை அனுபமா கூறினார்.

தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப்போகாதே’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘டில்லு ஸ்க்வேயர்’ என்ற தெலுங்கு படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததை பலரும் அவதூறாக விமர்சித்தனர். இதனால் கோபத்தில் இருக்கும் அனுபமா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

நான் ‘டில்லு ஸ்க்வேயர்’ படத்தில் முத்தக்காட்சியில் நடித்துள்ளதை பார்த்து ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தனர். முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நான் சொன்னது எனது 18 வயதில். ஆனால் இப்போது எனக்கு சினிமா பற்றிய முதிர்ச்சி வந்துள்ளது. கதைக்கு தேவையென்றால் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பது தவறு இல்லை.

அதுமட்டுமன்றி ஒரே மாதிரியான படங்களில் நடித்ததும் எனக்கு போரடித்துவிட்டது. இப்போது படத்தை பார்த்த பிறகு சிறப்பாக நடித்து இருப்பதாக பாராட்டுகின்றனர். படத்தை பார்த்த பிறகு பாராட்டவோ, விமர்சிக்கவோ செய்யலாம். ஆனால் படத்தை பார்க்காமலேயே அவதூறாக கேலி செய்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.