‘கேம் சேஞ்சர்’ பற்றி பேச இப்போது அனுமதி இல்லை: அஞ்சலி!

‘கேம் சேஞ்சர்’ பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், எங்களுக்கு அது பற்றி பேச இப்போது அனுமதி இல்லை என்று அஞ்சலி கூறினார்.

நடிகை அஞ்சலி ‘கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இதில் கிருஷ்ண சைதன்யா, விஷ்வக் சென், நேகா ஷெட்டி உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் புரமோஷன் நிகழ்ச்சியில், அவர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

அவர் கூறும்போது, “கேம் சேஞ்சர்’ பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால், எங்களுக்கு அது பற்றி பேச இப்போது அனுமதி இல்லை. படம் பற்றி இயக்குநர் ஷங்கர் அல்லது தயாரிப்பாளர் தில் ராஜுதான் பேச வேண்டும். எந்த அப்டேட்டாக இருந்தாலும் அவர்கள் மூலம்தான் வரும். அந்தப் படத்தில் நானும் ஒரு நாயகியாக நடித்திருக்கிறேன். படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகிறனர்” என்றார்.

இந்த நிலையில் திருமணம் குறித்து நடிகை அஞ்சலி கூறியதாவது:-

சமூக வலைத்தளங்களில் எனக்கு மூன்று, நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டார்கள். முதலில் இதுபோன்ற திருமண வதந்திகள் வந்தபோது வீட்டில் அனைவரும் கவலைப்பட்டனர். சில நாட்கள் வரை அது பெரும் பரபரப்பாக இருக்கும். இப்போது யாரும் கண்டு கொள்வதே இல்லை.

என் திருமணத்தை பற்றி வந்த வதந்திகள் காரணமாக நான் ஒரு பையனை அழைத்துச்சென்று இவனைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொன்னால் கூட வீட்டில் யாரும் நம்ப மாட்டார்கள். நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போது நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். நான் திருமணம் செய்த பிறகும் சினிமாவில் நடிப்பேன்.

கதாநாயகியாக நடிக்காமல் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்கிறீர்களே ஏன்? என்று சிலர் கேட்கிறார்கள். எனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது பிடிக்காது. 50 படங்களை தாண்டி வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.