3-வதாக ஆண் குழந்தைக்குத் தந்தையான சிவகார்த்திகேயன்!

மூன்றாவதாகத் தங்களுக்கு மகன் பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், ‘மெரினா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார். தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் என்கிற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (ஜூன்.2) மூன்றாவதாகத் தங்களுக்கு மகன் பிறந்ததாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களுக்கு நேற்றிரவு(ஜூன்-2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கு தர வேண்டுகிறோம். நன்றி..” என்று கூறியுள்ளார்.