‘கருடன்’ இயக்குநருக்கு மாலை அணிவித்த நடிகர் சூரி!

நடிகர் சூரி இயக்குநருக்கும் இசையமைப்பளருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன். துரை செந்தில்குமார் இயக்கிய இப்படம், கடந்த வெள்ளிக்கிழமை (மே.31) திரையரங்குகளில் வெளியானது. தேனி மாவட்ட வட்டாரத்தில் நிகழும் கதையாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சூரியின் நடிப்பும் சண்டைக்காட்சிகளும் பேசப்படுகின்றன. யுவன் இசையமைத்த இடைவேளைக் காட்சியின் பின்னணி இசையும் பெரியதாகக் கவனம் பெற்றுள்ளன.

இப்படம் உலகளவில் 6 நாளில் ரூ.23 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரவேற்பு சூரியின் படத்திற்குக் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர் சூரி இயக்குநருக்கும் இசையமைப்பளருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.