திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது குட்டி ரசிகருக்காக, தனது கால் வலியை மறந்து மண்டியிட்டு அவருடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டானது.

அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு பிறகு அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகாதால் ரசிகர்கள் அவரின் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது அவர், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’படத்தின் அறிவிப்பு வெளியாகி, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதரராபத்தில் நடந்து வந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருக்கும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித்தின் கைவசம் இருந்த விடாமுயற்சி படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடிக்க அஜித், அஜர் பஜான் செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று காலை திடீரென திருப்பதி கோவிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். பட்டு வேஷ்டி சட்டையுடன் கோவிலில் சாமி தரிசணம் செய்த அஜித்திற்கு அங்கிருந்த ரசிகர் ஒருவர் பெருமாள் சிலை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

முன்னதாக திருப்பதிக்கு சென்ற அஜித் அங்கிருந்த தேவஸ்தானம் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் கைகளை கொடுத்து நன்றி கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அப்போது, அங்கு இருந்த தனது குட்டி ரசிகருக்காக, தனது கால் வலியையும் மறந்து மண்டியிட்டு போட்டோ எடுத்துக்கொண்டார். போட்டோ எடுத்துவிட்டு அவர் எழுந்திருக்கும் போது அவரின் முகத்தில் அந்த வலி தெரிந்தாலும், அதை மறைத்துக்கொண்டார். இதைப்பார்த்த அஜித்தின் ரசிகர்கள், இந்த வீடியோவை டிரெண்டாக்கி இதனாலத்தான் அவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர்.