கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் கமலின் பல்வேறு கெட்டப்புகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

இரண்டாம் பாகம் என்ற ஃபேஷன் வருவதற்கு முன்பே நாங்கள் முதல் பாகத்தை எடுத்துவிட்டோம். ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தின் டப்பிங் பணிகளின்போதே நான் ஷங்கரிடம் சொன்னேன். ‘சார் இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம்’ என்று. அந்தப் படத்தின் ரிலீஸ் படபடப்பில் இருந்தோம். இரண்டாம் பாகம் எடுப்பதற்கான கருவை எங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் ஊழல் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் இரண்டாம் வருகைக்கு உங்கள் மத்தியில் அர்த்தம் உருவாகியுள்ளது.

நான் மதிக்கும் நல்ல நடிகர்கள் இன்று நம்முடன் இல்லை. அவர்கள் இந்த விழாவில் பங்கேடுத்திருக்க வேண்டியவர்கள். மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக் போன்றவர்கள் இருந்திருக்க வேண்டியவர்கள். இப்போது தான் விவேக்கின் காட்சிகளை படமாக்கியதாக தோன்றுகிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு ‘இந்தியன்’ சீரிஸ் ஓர் உதாரணம். இயக்குநர் ஷங்கர் இன்றும் இளைஞராகவே இருக்கிறார்.

இந்தப் படம் 5,6 வருடங்கள் எடுத்ததற்கு தொழில்நுட்ப கலைஞர்களோ, நடிகர்களோ காரணமில்லை. இயற்கை தான் காரணம். கோவிட், விபத்து என பல விஷயங்கள் இடையூறாக அமைந்தன. இதிலிருந்து எங்களை மீட்டு தோளில் சுமந்து வந்த லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு கடமைபட்டுள்ளோம்.
இந்த வெற்றியை அனுபவிக்க வேண்டியவர்கள் அவர்கள். இந்தப் படத்தில் உதயநிதி ஈடுப்பட்டதற்கு காரணம், இந்த இயக்குநரையும், நடிகரையும் அவர் பெரிதாக ரசிக்கிறார் என்பது தான் உண்மை. 100 சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறார் அனிருத். இந்தப் படத்துக்காக உழைத்தவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு உழைத்ததாக தெரியவில்லை. மாறாக அவர்கள் சந்தோஷமாக உழைத்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

“படிப்புக்கு ஏத்த வேலையில்லை; வேலைக்கு ஏத்த சம்பளம் இல்ல”, “திருட்றவன் திருடிட்டு தான் இருப்பான்” என தொடக்கமே ஊழல் குறித்த இளைஞர்களின் குமுறலாக வெளிப்படுகிறது. ஆங்காங்கே லஞ்சம் வாங்கும் காட்சிகள் வந்து செல்கின்றன. “சிஸ்டத்த சரி செய்ய துரும்ப கூட கிள்ளி போட்றதில்ல” என சித்தார்த் சொல்லி முடிக்க அடுத்து கமல்ஹாசனின் மாஸ் இன்ட்ரோ காட்டப்படுகிறது. ‘தசாவதாரம்’ படத்தில் வருவது போல பல கெட்டப்புகளில் காட்சியளிக்கிறார் கமல். இறுதியில் சட்டை கழட்டிக்கொண்டு சண்டை செய்வதெல்லாம் அதிரடி.

“இந்தியன் தாத்தா திரும்பி வரணும்; தப்பு செஞ்சா அதிலிருந்து தப்பிக்க முடியாதுங்குற பயம் வரணும்” உள்ளிட்ட வசனங்கள், சிஸ்டம் சரியில்ல வகையறாக்களின் குமுறல். ‘இந்தியன்’ முதல் பாகத்திலும் இதே ஊழல்தான் பேசப்பட்டது. 28 ஆண்டுகள் கழித்தும் அதே ஊழல்தான் கரு. அதைத் தாண்டி சமகால பிரச்சினைகள் குறித்து ட்ரெய்லரில் எதுவும் பேசப்படவில்லை.

“இது இரண்டாவது சுந்திர போர்; காந்தி வழியில நீங்க, நேதாஜி வழியில நான்”, “ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்ற டயலாக்குடன் ட்ரெய்லர் முடிகிறது. வயதான இந்தியன் தாத்தா கெட்டப்பில் ஸ்ட்ண்ட் காட்சிகள் எந்த அளவுக்கு கனெக்ட் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.