விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ ட்ரெய்லர் வெளியானது!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘கோலி சோடா’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவர்ந்தவர் விஜய் மில்டன். கடைசியாக 2018-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் ‘கோலி சோடா 2’ திரைப்படம் வெளியானது. அதன்பிறகு இவர் தமிழில் படம் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அச்சு ராஜாமணி – விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இளையராஜாவின் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். தன்னுடைய கடந்த காலங்களை மறைக்க புதிய ஊர், புதிய மனிதர்களுடன் வாழ்கிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு இருக்கும் ஒரே ப்ளாஷ்பேக் சரத்குமார். நாயிடம் அன்பு காட்டுவது என அவரின் கருணையுள்ளம் உணர்த்தப்படுகிறது. அவரின் மறுபக்கம் குறித்த தேடலை புதிராக காட்டுகிறது ட்ரெய்லர்.

“யாரைப் பத்தி, யாருக்கு தான் முழுசா தெரியும். ஒருத்தர பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிற முயற்சியில தானே இந்த உலகமே உருண்டுகிட்டு இருக்கு” என சரண்யா பொன்வண்ணன் பேசும் வசனம் கவனம் பெறுகிறது. “எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம அடுத்தவங்களுக்கு நல்லது நினைக்கிற மனசுதான் கடவுள். அப்படி பழகுற மனுசங்களுக்கு பிரச்சினைன்னா எப்டி சும்மா இருக்குறது” என்கிறார் விஜய் ஆண்டனி.

இதன்மூலம் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் பிரச்சினையில் அவர் தலையிடுவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளாகவும் படம் இருக்கும் என தெரிகிறது. ட்ரெய்லரின் இடையிடையே, ‘உறவுகள் தொடர்கதை’ பாடலின் துணுக்குகள் வருவது ஈர்ப்பைத் தருகிறது. படம் ஜூலையில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.