எனக்கு அதிதி ஷங்கரை ரொம்ப பிடிக்கும்: நயன்தாரா!

எனக்கு அதிதி ஷங்கரை ரொம்ப பிடிக்கும் என்று நடிகை நயன்தாரா கூறினார்.

மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘நேசிப்பாயா’. விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் கூட கலந்து கொள்ளாத நயன்தாரா இவ்விழாவில் கலந்து கொண்டு முதல் தோற்றத்தை வெளியிட்டார். தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஆர்.பி.சவுத்ரி, ஐசரி கணேஷ், நடிகர் ஆர்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விஷ்ணுவர்தன் கூறும்போது “இந்தப் படம் ஒரு அட்வென்சர் காதல் கதை. ஆக்‌ஷனும் உள்ளது. ஆகாஷுக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நயன்தாரா பேசும்போது, “இந்தப் படம் மூலம் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள். எனக்கு அதிதி ஷங்கரை ரொம்ப பிடிக்கும். திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போகமாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணுவர்தன், அவர் மனைவி அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக இருவரும் நல்ல பழக்கம். என் குடும்பம் போலத்தான் இவர்கள். அதனால்தான் இங்கு வந்தேன். இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. இனிமையான காதல் கதையை இந்தப் படத்தில் பார்க்க உள்ளீர்கள்” என்றார்.