அசுரன் படத்தில் நடிக்க காரணம் தனுஷ் தான்: மஞ்சு வாரியர்!

மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். சில காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்சகாலம் ஓய்வில் இருந்த மஞ்சு வாரியர் அதன் பின்னர் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன் பின்னர் அழுத்தம் திருத்தமான படங்களில் மட்டும் நடிக்க முடிவெடுத்து நடித்து வருகின்றார். இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். இதனால் இவர் நடிக்கும் மலையாளப்படங்களையும் ரசிகர்கள் தேடித் தேடி பார்க்கின்றனர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கும் அளவிற்கு ஒரு சூப்பர் ஸ்டாராகவே நடிகை மஞ்சுவாரியர் உருவாகியுள்ளார். இவர் தமிழில் எண்ட்ரி கொடுத்த படம் அசுரன். அசுரன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருப்பார். திருமண வயதில் உள்ள மகனுக்கு தாயாக நடித்த நடிகை மஞ்சு வாரியர் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலமும், தெளிவான தென் தமிழகத்து தமிழ் உச்சரிப்பின் மூலமும் அட்டகாசப்படுத்தியிருப்பார்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தினை வெற்றிமாறன் இயக்கினார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்தார். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை மைய்யப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது. யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை படத்தின் தன்மைக்கு ஏற்ப பாடல்களை எழுதியிருந்தார். அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், பசுபதி, டி.ஜே. அருணாசலம், கென் கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதில் சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. இந்தபடத்தில் நடிகை மஞ்சு வாரியர் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மஞ்சு வாரியர் பலராலும் பாராட்டப்பட்டார்.

இந்த படத்தில் நடித்தது தொடர்பாக நடிகை மஞ்சுவாரியர் பேட்டி ஒன்றில் பேசினார். அது தற்போது இணையத்தில் உலா வருகின்றது. அந்த பேட்டியில், நான் எனது குழந்தைப் பருவத்தில் 10 வயது வரை இருந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான் அதனால்தான் தமிழ் இந்த அளவிற்கு பேச முடிகின்றது. இயக்குநர் வெற்றி மாறன் என்னிடம் கூறினார் ஒரு கதாபாத்திரத்திற்கு நடித்த நடிகர்களே குரல் கொடுக்கும்போது அது மிகவும் நெருக்கமாக இருக்கும் என கூறினார்.

இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க யார் காரணம் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை மஞ்சு வாரியர், “எனக்கு முதலில் நடிகர் தனுஷ்தான் போன் செய்து இது போன்ற கதை ஒன்று இருக்கின்றது. நீங்கள் இந்த கதாபாத்திரத்துல் நடிங்க சரியாக இருக்கும் எனக் கூறினார். அதன் பின்னர் இயக்குநர் வெற்றி மாறன் வந்து கதை கூறினார். நான் இந்த படத்தில் நடிக்க காரணம் எனக் கேட்டால் அது தனுஷ் தான் என பதில் கூறினார்.