குணா படத்தை ரீ ரிலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை!

நடிகர் கமல்ஹாசன் நடித்து, 1991ம் ஆண்டு வெளியான குணா படத்தை மறு வெளியீடு செய்ய பட தயாரிப்பு நிறுவனமான பிரமிட் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் மலையாளத்தில் மஞ்சுமல் பாய்ஸ் படம் வெளியான பின், நடிகர் கமல் நடித்த குணா படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், படத்தின் முழு உரிமைதாரராக தன்னை அறிவிக்க வேண்டும் எனவும், படத்தை மறு வெளியீடு செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை தெரிவித்து, அத்தொகையை தனக்கு வழங்கும்படி, பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல் முருகன், குணா படத்தை மறுவெளியீடு செய்ய இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு ஜூலை 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் க்ரீன் மீடியா நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது உளவியல் காதல் திரைப்படமாகும். இந்த படத்தை சந்தானபாரதி இயக்கியிருந்தார். ஹிரோயின் கதாபாத்திரத்தின் பெயர் அபிராமி. அவர் அபிராமியின் அவதாரம் என்றும் அவரை திருமணம் செய்வது தன்னுடைய விதி என்றும் கமல்ஹாசன் நினைக்கிறார். இதனால் அபிராமியை கடத்திக் கொண்டு அவரை காதலிக்க வைக்கிறார். அவ்வாறு கடத்திக் கொண்டு செல்லும் போதுதான் குணா குகையில் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடல் பாடப்படும். இந்த பாட்டுதான் படத்தில் ஹைலைட்! . இந்த ஒரு பாட்டை வைத்தே மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் வசூலை அள்ளி குவித்ததுடன் தமிழக ரசிகர்களையும் ரசிக்க வைத்தது. கமலின் குணா திரைப்படத்திற்கு தமிழக மாநில திரைப்பட விருது, 39ஆவது பிலிம்பேர் விருதுகள், 12 ஆவது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், திரைப்பட ரசிகர் சங்க விருதுகள் ஆகியவை கிடைத்துள்ளன. இந்த படத்தில் கமல்ஹாசன் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை போன்று நடித்திருப்பார்.