திருமணம் என்பது பெரும் பொறுப்பு. வெறும் பார்ட்டி அல்ல: விஜய் வர்மா!

“உங்களுக்கு எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் அது பெரும் பொறுப்பு. வெறும் பார்ட்டி அல்ல” என நடிகர் விஜய் வர்மா கூறியுள்ளார்.

அண்மையில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான ‘மிர்சாபூர் சீசன் 3’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் நடித்துள்ள நடிகர் விஜய் வர்மாவின் நடிப்பு கவனம் பெற்றுள்ளது. இதையொட்டி அவர் அளித்துள்ள பேட்டியில், தமன்னா உடனான தனது உறவு குறித்து பேசினார். அவர் கூறியுள்ளதாவது:-

எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மக்களுக்கு இத்தனை ஆர்வமா என தொடக்கத்தில் அதிர்ச்சியடைந்தேன். பின்பு பழகிக் கொண்டேன். என்னுடைய படங்கள் வெளியாவதைக் காட்டிலும் இது மிகப் பெரிய செய்தியாக இருப்பதை உணர்ந்தேன். எனக்கும், தமன்னாவுக்குமான உறவு வலுவாகவும், அன்பாகவும் உள்ளது. நாங்கள் இருவரும் பொதுமக்களின் ஆர்வத்தை கவனத்தில் கொண்டோம்.

கடந்த 2005-ம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்தேன். அதே வருடத்தில் தமன்னா மும்பையிலிருந்து கிளம்பி ஹைதராபாத் வந்தார். மும்பை பெண்ணான அவர் ஹைதராபாத்தில் தடம் பதித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த நான், மும்பையில் தடம் பதித்தேன். அவர் தமிழிலும், தெலுங்கிலும் சரளமாக பேசுவார். எங்கள் உறவை சுவாரஸ்யமிக்கதாக உணர்கிறேன். ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடருக்கு பின் தான் எங்களுக்குள் உறவு மலர்ந்தது. தொடக்கத்தில் சக நடிகர்களாக அறிமுகமாக பின்பு நெருங்கி பழகினோம்.

உங்களுக்கு எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது ஒன்றும் பார்ட்டி அல்ல. நேரம் வந்துவிட்டது என்பதாலோ, எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதாலோ மணமுடிக்க கூடாது. இவ்வாறு விஜய் வர்மா கூறியுள்ளார்.