கோட் படத்தின் 3 வது பாடல் வெளியாகி இருக்கிறது!

கோட் படத்தில் இருந்து 3 ஆவது பாடலான ஸ்பார்க் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார். இவர்கள் தவிர, இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக இந்தப்படத்தில் இருந்து விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் ஆகிய பாடல்கள் வெளியாகி இருந்தன. அந்த இரண்டு பாடல்களையும் நடிகர் விஜயே பாடியிருந்தார். குறிப்பாக சின்ன கண்கள் பாடலில் மறைந்த பாடகியும் யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணியின் குரல் செயற்கை தொழில் நுட்பத்தின் வாயிலாக கொண்டு வரப்பட்டு இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த இரண்டு பாடல்களுமே பெரிய அளவிலான வரவேற்பை பெறவில்லை.

அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பார்க் பாடலும் எதிர்பார்ப்பை பெரிதளவு பூர்த்தி செய்யவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வருஷா பாலு இணைந்து பாடியிருக்கும் இந்தப்பாடலை, கங்கை அமரன் எழுதி இருக்கிறார். நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல், பிகில் ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில், தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் 5 ம் தேதி இந்தத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.