மீடியாவில் முகமே தெரியாதவர்கள் விமர்சிப்பது கஷ்டமாக இருக்கிறது: பிரியா பவானி சங்கர்!

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த ‘டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய பிரியா பவானி சங்கர், கேலி செய்வது காயப்படுகிறது, எல்லாரும் மனுஷங்கதான் என்று வருத்தப்பட்டு பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி சங்கர், இவர் அவர் சமீபத்தில் ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதில் பிரியா பவானி சங்கரை மட்டும் குறிப்பிட்டு, அவர் நடித்த எந்த திரைப்படங்களும் சரியாக ஓடுவதில்லை என்றும், இவர் ராசி இல்லாத நடிகை என்று மீம்ஸ் மூலமாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் அருண் பாண்டியன், நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள டிமான்டி காலனி பாகம் 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, அதன் முதல் பாகம் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை படக்குழு தயாரித்துள்ளது. ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த படம் தயாரிக்கப்பட்டு வெளியாக இருக்கின்றது திரைப்பட குழு ப்ரோமோஷன் வேலைகளை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் கூறுகையில், சோஷியல் மீடியாவில் வரும் விமர்சனத்தை பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருக்கும், எல்லோரும் மனுஷங்கதான். உங்களை கஷ்டப்படுத்துகிற மாதிரி பேசினால் உங்களுக்கு எப்படி கஷ்டமாக இருக்குமோ அதுபோலத் தான் நடிகர்களுக்கும் கஷ்டமாக இருக்கும். படத்தை பற்றி வரும் விமர்சனத்தை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்ல, ஆனால் அது நெகட்டிவ்வாக இருந்தாலும் பாசிட்டிவ்வாக இருந்தாலும் அது விமர்சனம். அதை ஏற்றுக்கொண்டால்தான் வளர முடியும். ஆனால் டிஜிட்டல் மீடியாவில் முகமே தெரியாதவர்கள் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது கஷ்டமாக இருக்கிறது என்றார்.