மாரி செல்வராஜ் என்னை ஒரே நாளில் கருப்பாக்கிட்டாரு: திவ்யா துரைசாமி

செய்திவாசிப்பாளரான திவ்யா துரைசாமி தொடர்ந்து படங்களில் நடித்து கலக்கி வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தில் அவர் நடித்ததை பார்த்து கூட நடித்த நிகிலா விமலுக்கே அவர்தான் என அடையாளம் தெரியவில்லை என பேசும் அளவுக்கு அந்த படத்துக்காக தன்னை முழுவதுமாக மாற்றியது எப்படி எனக் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படமும் அதே நாளில் திரைக்கு வருகிறது. வாழை படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த படத்தின் புரமோஷனுக்காக தொடர்ந்து நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் பேட்டியளித்து வருகின்றனர்.

நடிகை திவ்யா துரைசாமியின் இடுப்பு அழகை பார்த்து வியந்துப் போன ரசிகர்கள் அவரை டெஸ்லா குயின் என்றும் டெஸ்லா அழகி என்றும் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். செய்திவாசிப்பாளராக இருந்து வந்த திவ்யா துரைசாமி தொடர்ந்து சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். 2019ம் ஆண்டு வெளியான இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடிக்க ஆரம்பித்த திவ்யா துரைசாமி மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வாழை படத்தில் தனது கலர் டோனையே மாற்றி அவர் நடித்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வாழை படத்தில் கிராமத்துப் பெண்ணாக கருப்பு கலர்டோன் உடன் நடிக்க வேண்டும் என்பதற்காக முதல் நாள் படப்பிடிப்புக்கு கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு சென்றேன். அதை பார்த்த மாரி செல்வராஜ் சுத்தமா செட்டாகல, எதுக்கு இப்படி கருப்பு மேக்கப் போட்டுக்கிட்டு வந்திருக்கீங்க என்றார். உடனடியாக தேங்காய் எண்ணெய்யை எடுத்து உடம்பு முழுக்க தேய்க்கச் சொல்லி வெயிலில் 2 நாட்கள் நிற்க சொன்னார். நான் எப்போது பார்க்கிறேனோ அப்போதெல்லாம் குடை நிழலிலோ, மர நிழலிலோ நிற்கக் கூடாது என கண்டிஷன் போட்டார். அதன் பின்னர் கலர் டோன் மாறிவிட்டது. படம் முடியுற வரை சோப்பு போட்டோ, ஃபேஷ் வாஷ் யூஸ் பண்ணியோ குளிக்கவே இல்லை என்றார். திரும்பவும் என்னோட பழைய கலர் டோன் வர 6 மாசம் ஆகிவிட்டது என்றும் திவ்யா துரைசாமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

படத்தில் அவருடன் நடித்த நிகிலா விமலுக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பார்க்கும் போது, திவ்யா துரைசாமியை அடையாளமே தெரியவில்லை என்றும், தன்னுடன் நடித்தது வேறு ஒரு பெண் என்றும் இவர் இல்லை என்றே சொல்லி விட்டாராம். இருவரும் இணைந்து வாழ்ந்துள்ள வாழை திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.