அந்தகன் வெற்றி தொடக்கம்தான்: பிரசாந்த்!

அந்தகன் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை சம்பாதிக்க வேண்டும் என்று பிரசாந்த் கூறினார்.

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவி குமார் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘அந்தகன்’. ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நடிகர் பிரசாந்த் பேசும்போது, “இந்தப் படத்தின் வெற்றிக்கு இதில் நடித்த கார்த்திக் போன்ற அனுபவமிக்க நட்சத்திரங்களும் முக்கிய காரணம். சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. நான் பல வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. நானும், சிம்ரனும் நடித்த படங்கள். அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் அந்தகனும் இடம் பிடித்திருக்கிறது.

இயக்குநர், என் தந்தையாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்குப் பக்க பலமாக திறமைவாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றினர். இந்தப் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை சம்பாதிக்க வேண்டும்” என்றார்.