அனிமல் பட இயக்குநர் படத்தில் வில்லியாக திரிஷா?

நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். விடாமுயற்சி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. இந்தச் சூழலில் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஸ்க்ரீனில் தலை காட்டியவர் திரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தில் நடித்து படமும் வெளியாகிவிட்டது. முதல் படத்திலேயே திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் பப்ளியான ஹீரோயினைத்தான் கொண்டாடுவார்கள் என்ற மாயையை திரிஷா அடித்து நொறுக்கினார். அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் அழகும், திறமையும் கூடிக்கொண்டே போக திரிஷாவுக்கு என்று ரசிகர்களும் கூடிக்கொண்டே போனார்கள். அஜித், விஜய், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டிருக்கிறார் திரிஷா.

விடாமுயற்சி படம் மட்டுமின்றி கமல் ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் அவர் இணைந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் அவர் மறுபக்கம் ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்டிலும் கவனம் செலுத்திவருகின்றார். கடைசியாக அப்படி பிருந்தா என்ற வெப் சீரிஸில் நடித்தார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திரிஷாவின் அடுத்த படம் குறித்தும் அதில் அவரது ரோல் குறித்தும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும்; அதில் வில்லி ரோல் ஏற்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.