இரண்டாவது காதலரை கரம் பிடித்த எமி ஜாக்சன்!

இத்தாலியில் நடந்த எமி ஜாக்சன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்!

தமிழில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதனைத் தொடர்ந்து ‘தாண்டவம்’ ‘ஐ’ ‘கெத்து’ ‘தெறி’ ‘2.0’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக அருண் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த இவர் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். கடந்த 2020 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனிடையே இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அதன் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை, எமி ஜாக்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜ் உடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்தார். இதனையடுத்து இருவரும் பிரிந்தது உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் இவரும் நடிகர் எட் வெஸ்ட்விக்கும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி படுத்தும் விதமாக நடிகை எமி அவருடன் இருப்பது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இதன் மூலம் அவர் அவரை காதலித்து வருவது உறுதியானது. இந்த நிலையில் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் ஆனது. இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் – ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் திருமணம் இத்தாலியில் இருக்கும் காஸெல்லோ டி ரோக்கோ நகரில் நடைபெற்றது. நேற்றைய தினம் திருமணம் செய்த எமி ஜாக்சன், அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் இவர்களது திருமண விழாவில் அவரை மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகம் செய்ததோடு, ‘தாண்டவம்’, அச்சம் என்பது இல்லையே உள்ளிட்ட படங்களில் நடிக்க வைத்த ஏ.எல் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், “அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துகள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சி நிலைத்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை அதில் வெளிப்படுத்தி இருக்கிறார்.