நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர்.சி இயக்குகிறார்!

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிஷ் இசையமைத்துள்ள இப்படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அண்மையில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்திலும் நயன்தாராவே நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை குவித்தது கவனிக்கத்தக்கது. தற்போது சுந்தர்.சி வடிவேலுவை வைத்து ‘கேங்கர்ஸ்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.