நமது தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க வேண்டுமல்லவா: பிரியங்கா மோகன்!

நமது தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க வேண்டுமல்லவா என்று சமீபத்தில் நடந்த விவகாரம் குறித்து பிரியங்கா மோகன் ஓபனாக சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அடிப்படையில் பொறியாளரான இவர் அவ்வப்போது மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்ததால் திரைத்துறை கதவு திறந்தது. முதல் படத்தை விக்ரம் குமார் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் பிரியங்கா மோகனின் நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது. சூழல் இப்படி இருக்க சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா மோகன். படம் மெகா ஹிட்டானது மட்டுமின்றி பிரியங்கா மோகனின் நடிப்பும் பலமான வரவேற்பையே பெற்றது. இதனால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். கடைசியாக அவர் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார். இப்படி பிஸியாக இருக்கும் பிரியங்கா மோகன் விரைவில் டாப் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழில் அவர் நடிப்பில் டாக்டர் படம் முதலில் வெளியானாலும் அதற்கு முன்னதாகவே டிக் டாக் என்ற படத்தில் கமிட்டாகி நடித்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்தப் படமானது கடந்த வருடம் வெளியானது. அதன் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் இருந்தது. ஏனெனில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன்; டிக் டாக் படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். அது பெரும் பேசுபொருளானது.

இப்போது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார் அவர். அதாவது பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தபோது அவரிடம் செல்ஃபி கேட்டு ரசிகர்கள், ரசிகைகள் மொய்த்தனர். ஆனால் அவர்களிடம் சிடுசிடுவென்று பேசினார் பிரியங்கா அந்த வீடியோ ட்ரெண்டானது. அதனையடுத்து ஒரு ரசிகரிடமும், இப்படி எல்லாம் ஃபாலோ செய்து வரக்கூடாது என்றும் கூறினார். இந்தச் சூழலில் அந்த ரசிகரை எச்சரித்த பிறகு பிரியங்கா மோகன் சரண்யாவிடம் பேசும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், “இல்ல மேடம் அந்த ரசிகர் பல நாட்கள் என்னை பின் தொடர்ந்து வீடுவரைக்கும் வந்தார். அவர் க்ருப்போட. ஃபீனிக்ஸ் மாலிலிருந்து என்னை ஃபாலோ செய்தார். நமது தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க வேண்டுமல்லவா” என்றார். இந்த வீடியோவும் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.