நடிகர் சிம்பு செலுத்திய ரூ. 1 கோடியை திரும்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 9 கோடியே 50 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு, 4 கோடியே 50 லட்ச ரூபாய் முன்பணமாக கடந்த 2021ம் ஆண்டில் பெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், “கொரோனா குமார்” படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர், நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவனத்திற்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை மத்தியஸ்தராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்த போது, நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால், நடிகர் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 ரூபாயை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.