‘புஷ்பா 2’ நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது!

தெலங்கானாவில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.1,000 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் சிக்கட்பள்ளி போலீசார் தியேட்டர் நிர்வாகத்தினர் மீதும், நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தியேட்டர் நிர்வாகத்தினர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அல்லு அர்ஜுன் இன்று காலை சிங்கட்பள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து இருக்கிறது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவாரா அல்லது காவல் நிலையத்தில் ஜாமீன் வழங்கப்படுமா என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவை உடனடியாக அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அல்லு அர்ஜுன் வழக்கறிஞர்கள் நிரஞ்சன் ரெட்டி, அசோக் ரெட்டி ஆகியோர், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜுவ்வாடி ஸ்ரீதேவியின் பெஞ்சில் மனுவைத் தாக்கல் செய்தனர். மேலும் திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். அப்போது தெலுங்கானா மாநில கூடுதல் அரசு வக்கீல், போலீசாரிடம் கேட்டு பிற்பகலில் சொல்கிறேன் என்றார். இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், அல்லு அர்ஜுன் சிறையில் இரவை கழிக்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.