செருப்பால் அடித்திருக்க வேண்டும். அவனை மட்டுமல்ல, தப்பி ஓடிய அந்தக் காதலனையும் தான்: MS பாஸ்கர்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் தமிழகமெங்கும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இது தொடர்பாக தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அறிந்து தமிழகமே கொந்தளித்து கிடக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடைபாதையில் பிரியாணி கடை வைத்திருந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கண்டித்து போராட்டங்களை கையில் எடுத்துள்ளன.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகர் எம்எஸ் பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு கடந்த திங்களன்று பாலியல் வன்கொடுமை.. பாதுகாப்பு வேண்டி மாணவர்கள் போராட்டம்.. உடனே பொதுவாக சொல்லப்படும் கருத்து “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது” சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது யார் குற்றம்? கல்வி கற்கச் செல்லுமிடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா? காதலனுடன் மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிற்றா? வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்தக் காமுகன் மிரட்டினால், விட்டால் விடடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும். அவனை மட்டுமல்ல, தப்பி ஓடிய அந்தக் காதலனையும் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு கான்ஸ்டபிள் போட்டா பாதுகாப்பு தர முடியும்? பெண்ணைப் பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன்.. மொத்தத்தில் அனைவரும் முக்கியமாக பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் பயனில்லை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப் போவதில்லை. இதில் ஒருவேளை அரசைக் குறை கூறினால் அது நியாயமே இல்லை. வேதனையுடன் எம்.எஸ்.பாஸ்கர். இவ்வாறு எம்எஸ்கர் கூறியுள்ளார்.