கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்திபனின் ‘இரவின் நிழல்’ திரையிடப்படுகிறது!

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘இரவின் நிழல்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் பார்த்திபன். அந்த வகையில் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு பார்த்திபனின் வித்தியாசமான படைப்பாக உருவாகி உள்ளது ‘இரவின் நிழல்’. உலகிலே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான்-லீனியர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. அதாவது ஒரே டேக்கில் ஒட்டுமொத்த படத்தையும் பார்த்திபன் எடுத்துள்ளார். இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்துக்காக முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி அமைத்துள்ளார். ‌இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிடா சாகா ஆகியோர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு வெளியிடவுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க இருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில்என் “இரவின் நிழல்” திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன் என்று தெரிவித்துள்ளார்.