படையெடுத்து வந்தவர்களை பற்றி பக்கம் பக்கமாக உள்ளது: அக்சய்குமார்

நமது வரலாற்று பாடப்புத்தகங்களில் இந்திய மன்னர்கள் பற்றி எந்த குறிப்பையும் காணவில்லை. படையெடுத்து வந்தவர்கள் பற்றி பக்கம் பக்கமாக உள்ளது என நடிகர் அக்சய்குமார் ஆதங்கப்பட்டார்.

டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி இயக்கத்தில் அக்சய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடித்துள்ள ‘பிருத்விராஜ்’ திரைப்படம் ஜூன் 3 ரிலீஸ் ஆகிறது. இதன் டிரெய்லர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் அக்சய் ஈடுபட்டு வருகிறார். அப்போது செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நமது வரலாற்று பாடப்புத்தகங்களில் துரதிர்ஷ்டவசமாக மாமன்னர் பிருத்விராஜ் சவுகானைப் பற்றி இரண்டு அல்லது மூன்று வரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் படையெடுத்து வந்தவர்கள் பற்றி பக்கம் பக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம் மற்றும் நமது மன்னர்கள் பற்றி வரலாற்று புத்தகங்களில் எதுவும் இல்லை. நமது வரலாற்றைப் பற்றி எழுத யாரும் இல்லை, இந்த விஷயத்தை ஆராய்ந்து சரிப்படுத்த முடியுமா என்று கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். முகலாயர்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களும் சிறப்பானவர்கள். அதே சமயம் நம் மன்னர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.