விக்னேஷ் சிவன் ஒருவழியாக நயன்தாராவை கரம் பிடித்துவிட்டார்!

மாமல்லபுரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையாக கடந்த சில வருடங்களாக அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நயன்தாரா. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்த போது அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. கடந்த ஆறேழு வருடங்களாக காதலித்து வந்து இந்த ஜோடி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தங்கள் ஜோடிப் புகைப்படங்களை பதிவிட்டு மற்றவர்களை பொறாமைப்பட வைத்தனர். எப்போது திருமண செய்வீர்கள் என பலரையும் கேட்க வைத்தனர். கொரோனா காலக்கட்டத்தில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்தனர்.

இந்நிலையில் சென்னைக்கு அருகில் மகாபாலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நேற்று (ஜூன் 9) வெகு விமரிசையாக பிரமாண்டமாய் நடந்தது. கடற்கரை ஓரம் திறந்த வெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணிக்கு மேல் திருமண நிகழ்வு தொடங்கியது. 20 சிவாச்சாரியர்கள் தேவ மந்திரங்கள் முழங்க இந்து பாரம்பரிய முறைப்படி காலை 10.30 மணியளவில் மணமகள் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன். இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்த திருமணத்திற்கு வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பு இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதி அளிக்கப்பட்டனர். மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் பாரம்பரிய உடையணிந்து வரும்படி மணமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான நபர்கள் அப்படியே பங்கேற்றனர். திருமணம் நடைபெறும் கடற்கரை விடுதியை சுற்றி 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு வருபவர்கள் அலைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மேலும் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் அனைவரும் போனில் வரும் கியூஆர் கோடை காண்பித்தே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினிகாந்த் , ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஷாலினி அஜித், அனோஷ்கா அஜித், ஆத்விக் அஜித், ஷாமிலி, விக்ரம் பிரபு, குஷ்பு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், திலிப் ( மலையாளம் நடிகர்), கவின், திவ்ய தர்ஷினி(டிடி), ஏஆர்.ரகுமான், ஏஆர்ஆர்.அமீன், அனிருத், ரவி ராகவேந்திரா, லக்ஷ்மி ராகவேந்திரா, கேஎஸ் ரவிக்குமார், மணிரத்தினம், கௌதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்தன், அனு வர்தன், அட்லி, ஹரி, மோகன் ராஜா, எடிட்டர் மோகன், பிரீதா ஹரி, ஒளிப்பதிவாளர்கள் ஓம்பிரகாஷ், வெற்றி, வேல்ராஜ், தினேஷ் கிருஷ்ணன், தரண் குமார், கலா மாஸ்டர், சதீஷ், சோனி அசோக் பர்வாணி, பாடலாசிரியர் தாமரை, ஐசரி கணேஷ், போனி கபூர், லைகா தமிழ் குமரன், கல்பாத்தி எஸ் அகோரம், ஞானவேல்ராஜா, ராஜசேகர் பாண்டியன், ரவி, லலித் குமார், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சாந்தி பிலிம்ஸ் அருண் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

நயன் – விக்கி திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு மதியம் கல்யாண விருந்து வழங்கப்பட்டது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த திருமண நிகழ்வு ஓடிடி ஒன்றில் வெளியாக உள்ளது. இதற்காக பெரும்தொகை நயன் – விக்கி தம்பதியருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருமணத்தை இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்குகிறார். மிகவும் ஆடம்பரமாக பிரம்மாண்டமாய் திருமணத்தை நடத்தி உள்ளனர்.

விக்னேஷ் சிவன் ஒருவழியாக நயன்தாராவை கரம் பிடித்துவிட்டார். இவர்களது இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.