மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் இளையராஜா: அன்புமணி

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் இளையராஜா என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களை இசையால் வென்ற இளையராஜா இந்த பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். இசையால் மனக்காயங்களுக்கு மருந்திட்டவர். இந்திய மக்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஆற்றுப்படுத்தியவர். இது அவருக்கு சரியான அங்கீகாரம். அவர் இன்னும் உயர்ந்த அங்கீகாரங்களை பெறத் தகுதியானவர். அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தடகள வீராங்கனை பி.டி.உஷா, தெலுங்கு திரைப்பட எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத், கல்வியாளர் வீரேந்திர ஹெக்டே ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி சிறக்கட்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.