ஏதாவது பேசினால் தப்பாகி விடுகிறது: கவுதம் மேனன்

எந்த அளவுக்குப் பேசலாம்னு தெரியலை. ஏதாவது, பேசினா தப்பா ஆயிடுமோன்னு கூட தெரியலை என்று கவுதம் மேனன் கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் கடந்த வாரம் வெளியானது.
படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளதால் ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாகப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கெளதம் மேனன் கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சியில் எந்தளவுக்குப் பேச வேண்டும் எனத் தெரியவில்லை. இல்லை ஏதாவது தவறாகிவிடுமா என்றும் தெரியவில்லை. படம் பார்க்க நன்குத் தூங்கி விட்டு வாருங்கள் என்று சொன்னதை சமூக வலைத்தளங்களில் பெரிதுபடுத்தி விட்டார்கள். அதைப் பற்றி தயாரிப்பாளரிடம் கேள்வி கேட்டார்கள். அவர் எனக்கு போன் செய்து விசாரித்தார். காலை 5 மணி விமானப் பயணத்துக்கு நான் செல்லவேண்டும் என்றால் என் அம்மா, சீக்கிரம் தூங்கு, புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என்று என்னிடம் சொல்வார். அந்த ஓர் அர்த்தத்தில் தான் நான் சொன்னேன்.

என்னுடைய மற்ற படங்களை விடவும் இந்தப் படத்துக்கு அதிகமான நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. அந்த விமர்சனங்கள் நிறைய பேரிடம் படத்தைக் கொண்டு சேர்த்துள்ளன. எதிர்மறையான விமர்சனங்களுக்கும் நன்றி. என்னுடைய குழுவினர் அதைப் படித்து வருகிறார்கள். அதிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்களும் உள்ளது என நினைக்கிறேன். நான் அவ்வப்போது யோசிப்பேன், விமர்சனங்களே இல்லாமல் இருக்கலாமா என. நான் விமர்சனங்களைப் படிக்க மாட்டேன். விமர்சனங்கள் படிக்காமல் படம் பார்க்கவே விரும்புவேன். படம் பார்த்த பிறகு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விமர்சனங்களைப் படிப்பேன். இன்னொருத்தர் பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிற விமர்சனமா இது என யோசிப்பேன். பிறகு படம் தானே, விமர்சனம் செய்வது அவர்கள் வேலை என நினைத்துக் கொள்வேன். இதில் மட்டும் தான் (விமர்சனங்களால்) யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறார்.

ஒரு விமர்சனம் சில நேரங்களில் படத்தினைப் பாதிக்கக்கூடும். பாதிக்கக்கூடாது என நினைக்கிறேன். ஒரு படத்தைக் கஷ்டப்பட்டு எடுத்து அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது எவ்வளவு கஷ்டமான, முக்கியமான விஷயம் என்று எனக்குத் தெரிகிறது. உங்களுக்கும் தெரியும் என நம்புகிறேன். பட வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்பு படத்தின் நீளம் சிறிது அதிகமாக உள்ளதாகச் சொன்னார்கள். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஸ்பீக்கர் போனில் பேசிக்கொண்டிருந்தபோது நான் அருகில் தான் இருந்தேன். அவர் சொன்னார், இல்லை சார்.. விட்டுப் பார்க்கலாம். எனக்குப் படம் பிடித்திருக்கிறது. நன்றாக ஓடும் என்று சொன்னார். என்னை நம்பியதற்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.