ஈரானிய பெண்களுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு!

நீண்ட காலமாக கட்டாய மவுனத்திற்குப் பிறகு வெளிவரும் எதிர்ப்புக் குரல்கள் எரிமலையாக வெடித்துச் சிதறும்! இவை தடுக்கப்படக்கூடாது என்று, ஈரான் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானிய இளம் பெண் மஹ்சா அமினியை போலீசார் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஈரானில் பெண்கள், தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா களமிறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் உள்ளிட்ட முன்னணி பிரெஞ்சு நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பிரியங்கா சோப்ராவும் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது:-

ஹிஜாப் முறையாக அணியாததற்காக மஹ்சா அமினியின் இளம் வயதிலேயே அவரது வாழ்க்கை ஈரானிய போலீஸாரால் மிகவும் கொடூரமாக பறிக்கப்பட்டது. ஈரானிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மஹ்சா அமினிக்காக பகிரங்கமாக எழுந்து நின்று குரல் எழுப்பி வருகின்றனர். தங்கள் தலைமுடியை வெட்டுகிறார்கள் மற்றும் பல வடிவங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலமாக கட்டாய மவுனத்திற்குப் பிறகு வெளிவரும் எதிர்ப்புக் குரல்கள் எரிமலையாக வெடித்துச் சிதறும்! இவை தடுக்கப்படக்கூடாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.