நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து நன்றி கூறிய சரத்குமார்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். தன்னை வாழ்த்திய நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து சரத்குமார் நன்றி கூறினார்.

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் இதுவரை உலக அளவில் 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனிடையே, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பின் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் சரத்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார், நடிகர் ரஜினி காந்தை நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக நடிகர் சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “அன்பு நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ‘பெரிய பழுவேட்டரையர்’ கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்” என பதிவிட்டுள்ளார்.