இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவானார் நயன்தாரா!

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் ட்வீட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

சரத்குமார் ஜோடியாக ‘ஐயா’ படத்தில் ஹீயோயினாக அறிமுகமான நயன்தாரா, இன்று தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார் நயன். இதனையடுத்து ஹனிமூன் கொண்டாடுவதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்தனர். நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். ஜூன் 9ம் தேதி நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் அது திருமண வீடியோ இல்லை, நயன்தாராவின் பயோபிக் என பின்னர் தெரியவந்தது.

கடந்த சில தினங்களாக நயன்தாரா கர்ப்பமாக உள்ளதாகவும், நடிக்காமல் ஓய்வில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அதுகுறித்து நயன்தாரா தரப்பில் இருந்து எந்த விளக்கங்களும் கொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் போட்டுள்ள டுவிட்டர் பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பதிவில், “நானும் நயனும் அம்மா அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது” என பதிவிட்டுள்ளார். மேலும், “எங்கள் பிரார்த்தனைகள் முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகளை பரிசாகக் கொடுத்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உயிர் மற்றும் உலகம்” என பதிவிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நான்கே மாதங்களில் குழந்தை பிறந்துள்ளது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.

இந்நிலையில் அவர் வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களூம் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளை வளர்ப்பதற்காக புதிய படங்களில் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவு செய்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.