ஆதம்பாக்கம் சத்யா கொலையால் மனம் குமுறுகிறது: நடிகர் தாமு!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவம் பெண்களை பெற்ற தந்தையாக எனக்கு மனம் குமுறுகிறது என மதுரையில் நடிகர் தாமு பேட்டி அளித்துள்ளார்.

உலக உணவு தினத்தினை முன்னிட்டு மதுரையில் அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் பார்வையற்றோருக்கு அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் இரவு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆடிட்டர் சேது மாதவா எஸ்.வி.எஸ். கடலை மாவு நிறுவன செயல் இயக்குனர் சூரஜ் சுந்தர சங்கர் தொழிலதிபர் மற்றும் ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் ஆனந்த் காசிமணி எழுத்தாளர் ஆதவன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் தாமு கலந்து கொண்டு பார்வையற்றோர்களுக்கு அரிசி உணவுப்பொருட்களை வழங்கினார்.

முன்னதாக பார்வையற்றோரிடம் உரையாற்றிய நடிகர் தாமு அவர்களின் வேண்டுகோளை ஏற்று மிமிக்ரி செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நடிகர் தாமு கூறியதாவது:-

இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர், போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர வேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது முதல்நாள் காட்சி பார்த்தபின் ரசிகர்கள் கூறும் கருத்தே அந்த படம் வெற்றியா தோல்வியா என்பதை நிர்ணயித்துவிடும். சினிமாவை ஓடிடியில் பார்ப்பதை விட திரையங்கில் பார்த்து ரசிப்பது தான் நன்றாக இருக்கும். எவ்வளவு பெரிய விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் சினிமாவை திரையரங்குகளில் தான் பார்க்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

திரைப்படங்களில் பாசிடிவ், நெகடிவ் இருக்கிறது. இளைஞர்கள் பாசிட்டிவானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மது அருந்த கூடாது சினிமாவில் போதை காட்சிகளில் மது அருந்தக் கூடாது என எழுத்து போடுவது ஏமாற்று வேலை, இது பெரிய மனமாற்றத்தை தராது. நான் திரைப்படம் இயக்கினால் போதை காட்சிகள் இல்லாமல் எடுப்பேன். சினிமா என்பது பொழுதுபோக்குதான். படம் பார்க்கும் போது டைம் போவதே தெரியாமல் இருப்பது தான் நல்ல சினிமா அது தான் வெற்றிப்படமாக அமையும்.

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை உருவக்கேலி செய்வது தடுக்க வேண்டும், யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது. சென்னை கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால் அழுகை வருகிறது. பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தையாக எனது உள்ளம் குமுறுகிறது, நீதிபோதனைகளை பள்ளி வகுப்பிலயே கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் மீது சினிமாத் துறையினர் அக்கறை காட்ட வேண்டும். சினிமாவில் பள்ளி சீருடையுடன் காதலிப்பது போன்ற காட்சிகளை நிஜம் என இளைஞர்கள் நம்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மனதில் தவறான தாக்கம் ஏற்படும். எனவே இது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும். சினிமா மூலம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மாணவர்களுக்கு கல்லீரல் குறித்து பாடம் வைத்தால் மது பழக்கத்திற்கு ஆளாக மாட்டார்கள், மாணவர்கள் கிங்காக வர வேண்டும் என்றால் ஸ்மோக்கிங், ட்ரிங்கிக் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.