லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 38வது பிறந்தநாள்!

இன்று தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக மாறியுள்ள நடிகை நயன்தாராவின் 38வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரபல நடிகர்களுடன் காதல் முறிவுகள், திருப்பதி கோயிலில் செருப்பு காலுடன் சென்றது, வாடகைத்தாய் சர்ச்சை என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும், தனது விடாமுயற்சியால் தொடர்ந்து சினிமா இண்டஸ்ட்ரியில் நம்பர் ஒன் இடத்தில் கெத்தாக அமர்ந்து வருகிறார் நயன்தாரா.

1984ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பெங்களூருவில் மலையாள குடும்பத்தில் பிறந்தவர் டயானா மரியம் குரியன். அப்பா ஏர்போர்ஸில் வேலை செய்து வந்ததால், பல மாநிலங்களில் இவர் படிக்க வேண்டிய சூழல் உருவானது. கடைசியாக கேரளாவில் அவர்கள் செட்டில் ஆக மாடலிங் மற்றும் விஜேவாக பணிபுரிந்து வந்த நயன்தாராவுக்கு மனசின்னக்கரே படத்தின் மூலம் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது. லேடி சூப்பர்ஸ்டார் என தென்னிந்தியாவே கொண்டாடி வரும் நடிகை நயன்தாராவுக்கு இன்று 38வது பிறந்தநாள்.

6 ஆண்டுகளுக்கு முன்பாகவே விக்னேஷ் சிவனை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டாலும், சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக அனைவரும் அறியும் வகையில் தனது திருமணத்தை நயன்தாரா ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் சூழ செய்து கொண்டார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். அந்த அறிவிப்புக்கு பின்னர், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி ட்வின்ஸ் என சர்ச்சைகள் வெடித்தன. பின்னர், வாடகைத்தாய் முறையில் மோசடி செய்யப்பட்டதா? என்றும் விவாதிக்கப்பட 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்றும் அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நயன்தாரா தரப்பும் அரசு தரப்பும் தெரிவித்தது.

நடிகை நயன்தாரா மட்டும் தான் தென்னிந்தியாவிலேயே அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோயினாக திகழ்கிறார். பாலிவுட்டில் கூட தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட சில பிரபல நடிகைகள் மட்டுமே இத்தகைய சம்பளத்தை வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்வில் பல சோதனைகள் வந்தாலும், அதை சாதனையாக்கி வீர நடை போட்டு வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!