அன்பான ரசிகர்களே எப்போதும் நன்றியுடனும் அன்புடனும்: சமந்தா

நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா வெற்றி பெற்றதுக்கு அவர் நன்றி கூறியுள்ளார்.

நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படம், நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது. படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 3 நாளில் உலகம் முழுவதும் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலானதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.

இந்நிலையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

அன்பான பார்வையாளர்களே, யசோதாவின் மீதான உங்கள் பாராட்டும் அன்பும்தான் நான் கேட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய பரிசும் ஆதரவும். நான் மகிழ்ச்சியினாலும் நன்றியினாலும் மூழ்கியிருக்கிறேன். யசோதா குழுவினர் உழைத்த அத்தனை உழைப்பும் பலனளித்தது என்பதற்கு உங்கள் விசில் சத்தம் கேட்பதும், தியேட்டர்களில் நடந்த கொண்டாட்டங்களைப் பார்ப்பதும்தான் சான்று. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

யசோதா தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக தயாரிப்பாளர் கிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இயக்குநர் அவர்களுடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் அன்பான சக நடிகர்களான வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன் மற்றும் மற்ற அற்புதமான நடிகர்களுக்கு, உங்களுடன் இணைந்து பணியாற்றியதும் அருமையாக இருந்தது. எப்போதும் நன்றியுடனும் அன்புடனும்- சமந்தா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.