திருட்டு ரயிலேறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பாப்போம்: கஸ்தூரி

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களை குறித்து பரவி வரும் வதந்திக்கு நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார். திருட்டு ரயிலேறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பாப்போம் என்று கஸ்தூரி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள பிகார் மாநில தொழிலாளர்கள் இந்தி பேசுவதால் தாக்கப்படுவதாக பாஜகவை சார்ந்தவர்கள் சோஷியல் மீடியாவில் போலி செய்திகளை பரப்பிய சம்பவம் பூதாகரமாகியுள்ளது.
தொடக்கத்திலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக காவல்துறை இந்தியிலேயே விளக்கம் அளித்து டுவீட் பதிவிட்டது. மேலும், பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரையம், அம்மாநில காவல்துறையியும் டேக் செய்து, பிகார் மாநில தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும், இங்குள்ள வட மாநிலத்தவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அதனால் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் படையெடுத்துள்ளதாகவும் செய்திகள் வாயிலாக தகவல்கள் பரவுகின்றன. இதனால், பிகாரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. டுவிட்டரில் இது தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் சூழலில் நடிகை கஸ்தூரி போட்டுள்ள டுவீட் கவனம் பெற்றுள்ளது.

கஸ்தூரி தமிழகத்துக்கு எதிராக பரப்பப்படும் போலி செய்திகளை மறுத்து டுவீட் போட்டுள்ளார். அதில், ”வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை” என்று கஸ்தூரி கூறியுள்ளார். வட மாநிலத்தவர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசியுள்ள கஸ்தூரி ‘திருட்டு ரயில்’ என குறிப்பிட்டு ஆளுங்கட்சியை சீண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.