தட்டி விடுவதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை: சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. இப்படத்தில் இசை வெளியிட்டு விழா நேற்று நடைெற்றது. இதில் அவர் பேசுகையில் தட்டி விடுவதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை என்று கூறியுள்ளார்.

சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பத்து தல. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சிம்பு கூறியதாவது:-

நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் ஓடியது. அது இந்த நிகழ்ச்சியில் அழக்கூடாது. அது மட்டும் தான் நினைத்தேன். படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுதுவிடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாதுனு நினைத்தேன். ஏனென்றால் நாம் நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனிமே சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்தப் படத்தை கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடித்திருப்பார். அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். அவர் கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும் என தயங்கினேன். அதையும் தாண்டி இந்தப் படம் ஒத்துக் கொண்டதற்கு காரணம் கௌதம் தான்.

சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்கு உண்டு. ஏனென்றால் இங்க தட்டி விடுவதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டி கொடுப்பதற்கு யாரும் இல்லை. எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும் தான் உள்ளனர். எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமையுதா இல்லையோ, கெளதம் கா்த்திக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். கெளதமிற்காக மட்டுமே இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.

எல்லோரும் என்னிடம், ‘முன்னாடி உங்கள் பேச்சில் ஒரு எனர்ஜி இருக்கும். இப்போது எல்லாம் சாஃப்டாக பேசுறீங்கனு கேட்கிறார்கள். அதுக்கு ஒரு காரணம் உள்ளது. முன்பெல்லாம் ‘நான் யாருனு தெரியுமாடானு’ என்ற அளவுக்கு பேசியிருக்கேன். ஒப்புக்கொள்கிறேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்கமாட்டேன்; என் கதை முடிந்துவிட்டது எனப் பேசினார்கள். அந்த நேரத்தில் நான் தான் எனக்கு துணையாக இருந்தேன். அதனால் தான் அதுபோன்ற கத்தி பேசுவது எல்லாம் நடந்தது. மாநாடு படத்தை கொண்டாடி, வெந்து தணிந்தது காடு படத்தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்போது இந்த மேடையில் கொண்டுவந்து என்னை நிறுத்தியுள்ளீர்கள். அப்புறம் எப்படி கத்தி பேச முடியும் பணிந்து தான் பேச முடியும். இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை; செயல் மட்டும்தான். இனிமே ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது:-

பத்து தல படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டது சிம்புவுக்காக தான். மற்றொரு காரணம் ஓபிலி கிருஷ்ணா. அவரிடம் ஒரு தனித்துவ இசை ஆர்வம் இருக்கிறது. படத்தில் வரும் ‘அக்கறையில’ பாடல் சிம்பு பாட வேண்டியது. அவர் தாய்லாந்து சென்றதால் அந்த பாடலை நானே பாடிவிட்டேன். டி.ராஜேந்தர் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி.மஹாதேவன் உள்ளிட்ட பலரிடம் நான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், டி.ராஜேந்தரிடம் வேலை பார்க்கும்போது அதுவரை இன்ட்ரோவர்ட்டாக இருந்த நான் அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து எக்ஸ்ட்ரோவர்டாக மாறினேன். அதுதான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். இவ்வாறு அவர் கூறினார்.