தனுசுடன் இணைந்து நடிக்க தான் எப்போதும் மறுப்பு சொல்ல மாட்டேன்: கங்கணா ரனாவத்

தனுஷ் மிகவும் அற்புதமானவர் என்றும், அவருடன் இணைந்து நடிக்க தான் எப்போதும் மறுப்பு சொல்ல மாட்டேன் என்றும் கங்கணா ரனாவத் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்ககுநராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசியரியராகவும் இவன் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான வாத்தி படம் சார் என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீசானது. இந்தப் படத்தின்மூலம் தன்னுடைய டோலிவுட் என்ட்ரியை செய்திருந்தார் தனுஷ். அவரது அறிமுகத்தில் வெளியான சார் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வசூல் சாதனையும் படைத்தது. தமிழிலும் இந்தப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார். இந்தப் படங்களுக்கு முன்பாக அவர் இயக்கி நடிக்கவுள்ள டி50 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகவுள்ள இந்தப் படம் வடசென்னை கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, இந்தப் படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்தை படக்குழுவினர் அணுகியதாகவும் ஆனால் டேட்ஸ் இல்லாததால் அவர் நடிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் அவரது கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் உள்ளதால் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவலை கங்கணா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது தவறான செய்தி என்றும், இதுபோன்ற படவாய்ப்பு எதுவும் தன்னிடம் வரவில்லை என்றும் கூறியுள்ளார். தனுஷ் மிகவும் அற்புதமானவர் என்றும், அவருடன் இணைந்து நடிக்க தான் எப்போதும் மறுப்பு சொல்ல மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.